
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டியில், அரைசதம் அடித்ததற்காக ஷிவம் துபே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி எடுத்த முடிவு ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது அவருக்கு தலையில் பந்து தாக்கிய நிலையிலும், அடுத்த பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பிறகு அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய வரவில்லை, மேலும் மூளையதிர்ச்சி காரணமாக, அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். துபேவுக்குப் பதிலாக வந்த ஹர்ஷித் ராணா சிறப்பாக செயல்பட்டதுடன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்வதற்கும் மிகப்பெரும் காரணமாக அமைந்தார்.