Advertisement

வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 01, 2023 • 21:44 PM
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை;  திறப்பு விழாவில் பிரபலங்கள்!
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்! (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் உச்சத்தில் இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகள், 100 சதங்கள், 34 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்று யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை படைத்துள்ளார். இவருக்கு உலகளவில் ரசிகர்கள் ஏறாளம். அந்த அளவிற்கு சச்சினை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் கொண்டாடி வருகின்றனர்.

1990களில் சச்சின் டெண்டுல்கரை நம்பி மட்டுமே இந்திய கிரிக்கெட் அணி இருந்தது என்று சொல்ல முடியும். வளர்ந்து வந்த இந்தியாவுக்கும், அன்றைய இளைஞர்களுக்கும் சச்சின் டெண்டுல்கர் ஒரு நம்பிக்கையாக இருந்தார். இதன் காரணமாகவே சச்சின் டெண்டுல்கர் உணர்வு ரீதியாக ரசிகர்கள் பார்த்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், இன்றும் சச்சினுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

Trending


இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சொந்த மண்ணில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. ஷேன் வார்னே பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஷாட்டை நினைவுபடுத்தும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளின் போதே திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சச்சின் டெண்டுல்கரின் சிலை செய்யும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், தாமதம் ஏற்பட்டது. ஆனால் அந்த தாமதம் கூட சச்சின் டெண்டுல்கருக்கு கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் சச்சினின் சிலை இன்று திறக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் கேலரி அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 22 அடியாகும். அஹ்மத் நகரைச் சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பாளரான பிரமோத் காம்ப்ளே சச்சினின் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல் சச்சின் டெண்டுல்கர், சச்சின் மனைவி அஞ்சலி, மகள் சாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை போட்டி நடக்கவுள்ள நிலையில் சச்சினின் சிலை திறக்கப்பட்டுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement