
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு பல ஆண்டுகள் கழித்து, அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் போட்டி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் சென்னை அணியும், மும்பை அணியும் இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்க உள்ளது.
இந்த தொடருக்கான மினி ஏலம் வரும் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது. இதற்காக 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடர் மூலம் இம்பேக்ட் பிளேயர்ஸ் என்ற புதிய விதிமுறை அமல்படுத்த போவதாக பிசிசிஐ அன்மையில் அறிவித்தது. அதன்படி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஏதேனும் ஒரு வீரருக்கு பதிலாக வேறு வீரரை 2ஆவது இன்னிங்சில் மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, பும்ரா போன்ற பந்துவீச்சாளர், பேட்டிங்கில் எந்த தாக்கத்தையும் ஏறபடுத்த மாட்டார். இதனால், அவர் பந்துவீசி முடித்தவுடன் அவருக்கு பதில் வேறு ஏதேனும் பேட்ஸ்மேனை களமிறக்கலாம்.
இந்த விதி பிக் பேஷ் போன்ற தொடரில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றுவது என்பதால், இந்த விதியை சோதனை முயற்சியாக நடப்பாண்டில் சையது முஸ்தாக் அலி டி20 தொடரில் பிசிசிஐ பயன்படுத்தியது. இது வீரர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரிலும், இந்த விதிமுறை பயன்படுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.