
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. 7 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் விளையாட உள்ளது. இதனால், இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பல விஷயங்கள் குறித்து பேசினார். இந்தியா உடனான போட்டிக்கு அழுத்தம் இருக்கிறதா என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பாபர் ஆசாம், "போட்டியை விட, போட்டி டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது" என சிரித்துக்கொண்டே கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவும் பாகிஸ்தானும் நிறைய முறை ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளோம். அதனால், எங்களுக்கு இது அழுத்தம் மிகுந்த போட்டியாக தெரியவில்லை. ஹைதராபாத்தில் எங்கள் அணிக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. அகமதாபாத்திலும் அதேபோல் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.