
டி20 உலக கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டையும் வெற்றி பெற்று இந்திய அணி தனது குரூப்பில் முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணியை நான்கு விக்கெடுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, அக்டோபர் 27ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோதியது.
அதிலும் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பார்மை இழந்திருந்த கேப்டன் ரோகித் சர்மா இப்போட்டியில் 53 ரன்கள் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பினார். விராட் கோலி இந்த உலகக் கோப்பை இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 44 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்தார். வந்தவுடனேயே வெளுத்து வாங்கிய சூரியகுமார் 25 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயரே எடுத்துச் சென்றார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இப்படி சிறப்பான ஃபார்மில் இருப்பது ஆரோக்கியமாக தெரிகிறது.
இந்தியா தனது மூன்றாவது போட்டியை ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. தென்னாபிரிக்காவுக்கு வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேச அணிக்கு எதிராக 205 ரன்கள் அடித்திருந்தது. அதே நேரம் வங்கதேச அணியை 101 ரன்களுக்குள் சுருட்டி 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆண்ட்ரிக் நார்கியா 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.