
இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு சில நாட்களுக்கு முன்பு ஆசியக் கோப்பை ஒருநாள் தொடருக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட்டது. இந்த அணியில் 20 வயதான, உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இளம் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் ஆட்டத்தை நகர்த்திச் செல்வதில் காட்டும் பொறுப்பு மற்றும் அவருடைய மனதிடம் ஆகியவை பல முன்னாள் வீரர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் ஆசிய கோப்பை இந்திய அணியில் அவர் இடம்பெற வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
இப்படியான நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் திலக் வர்மாவை இப்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணி வரை கொண்டு செல்லக்கூடாது. அவரை அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பைக்கு கொண்டு சென்று அதற்கு மேல்தான் பெரிய தொடர்களுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார்.