
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 உலகக்கோப்பைக்கு முன் முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கியுள்ளன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், ஃபின் ஆலன் (34 ரன்கள்), கேன் வில்லியம்சன் (57 ரன்கள்) மற்றும் டேரில் மிட்செல் (61 ரன்கள்) மூன்று பேரின் அபாரமான ஆட்டத்தால் 226 ரன்களை குவித்தது.
பின்னர் ஒரு இமாலய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில், 57 ரன்கள் அடித்த பாபர் அசாம் கடைசிவரை போராடினார். ஆனால் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சௌதீ நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். முடிவில் 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் சந்தித்த 8 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்டு 27 ரன்கள் விளாசிய நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் ஆயுப் விட்ட இடத்திலிருந்து சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர்.