
திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டி ஜூன் 8ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்த்து.
இப்போட்டியின் போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை வீசிய சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். ஆனால், அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாகத் தெரிந்ததால், அஸ்வின் நடுவரின் முடிவில் அதிருப்தியாகி, கள நடுவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இருப்பினும் டிராகன்ஸ் அணி ஏற்கெனவே இரண்டு மேல்முறையீட்டு வாய்ப்பையும் இழந்திருந்தது.
இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினால் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியவில்லை. இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கே சென்ற அஸ்வின், பெவிலியன் திரும்பும் போது பேட்டால் தனது பேடில் பலமாக தாக்கியதுடன், பெவிலியனுக்கு சென்று தனது கிளவுஸையும் கழற்றி வீசினார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி விமர்சனங்களையும் எதிர்கொண்டது.