டிஎன்பிஎல் 2025: லோகேஷ்வர், திவாகர் அபாரம்; தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

திருநெல்வேலி: லோகேஷ்வரின் ஆபாரமான ஆட்டத்தின் காரணமாக லைகா கோவை கிங்ஸ் அணியானது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணிக்கு ஜிதேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் ஜிதேந்திர குமார் 9 ரன்கள் மட்டுமே எடுத்த் கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சச்சின் 10 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த லோகேஷ் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 90 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் லைகோ கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சந்தோஷ் குமார் 7 ரன்கள், கேப்டன் அருண் கார்த்திக் 4 ரன்கள், ஹரிஷ் 4 ரன்கள், அதிஷ் ஒரு ரன், ரித்திக் ஈஸ்வரன் 6 ரன்கள், அஜிதேஷ் குருஸ்வாமி 8 ரன்கள் மற்றும் சோனு யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்கள் என அடுத்தடுத்து வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் ராயல் கிங்ஸ் அணியானது 68 ரன்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமறியது.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது ஆதான் கான் ஒருபக்கம் ஸ்கோரை உயர்த்த, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் ஆதான் கானும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் ஆட்டமிழக்க, ராயல் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களில் ஆல் அவுட்டானது. கோவை அணி தரப்பில் திவாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வீழ்த்தியதுடன், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now