
TNPL 2025 Final: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமித் சாத்விக் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோரும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார்.