
15ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று, அறிமுக அணியான குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதையடுத்து மழைக்கு நடுவே நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின.
எலிமினேட்டர் போட்டி என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, பெங்களூரு அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் டூ பிளசிஸ் டக் அவுட்டாக, முன்னாள் கேப்டன் விராத் கோலி 25 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தநிலையில், கிளென் மேக்ஸ்வெல் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அந்த அணியின் இளம் வீரரான ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடிக்க, அவருக்கு பக்க பலமாக தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து, இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் கே.எல்.ராகுல் (79) மற்றும் தீபக் ஹூடா (45) ஆகியோர் மட்டுமே நிதானமாக விளையாடினர். எனினும் அந்த அணி 14 ரன்களில் தோல்வியடைந்து குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெறாமல் எலிமினேட்டாகி வெளியேறியது. இந்தப் போட்டியில் கே.எல். ராகுலின் இரண்டு தவறுகளால் தான் அணி தோல்வியை நோக்கி சென்றதாக விமர்சனம் எழுந்தது. முக்கியமானப் போட்டியில் அதிரடியாக விளையாடாமல், கே.எல். ராகுல் பொறுமையாக விளையாடி 58 பந்துகளில் 79 ரன்களே எடுத்தது விமர்சனம் எழுந்தது.