
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நேற்று முந்தினம் இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் பெனோனியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அண்டர்19 அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களை விளாசினார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அண்டர்19 அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதில் தொடக்க வீரர் அதார்ஷ் சிங் 47, முருகன் அபிஷேக் 42 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 4ஆவது முறையாக ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.