
இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் மஹாராஷ்டிரா மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மஹாராஷ்டிரா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணிக்கு துருவ் ஷோரே - யாஷ் ரத்தோட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 116 ரன்களில் ஆட்டமிக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துருவ் ஷோரே 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 114 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கருண் நாயர் - ஜித்தேஷ் சர்மா இருவரும் அதிரடியில் மிரட்டியதுடன் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் ஜித்தேஷ் சர்மா 51 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் கருண் நாயர் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 88 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 380 ரன்களைக் குவித்தது. மஹாராஷ்டிரா அணி தரப்பில் முகேஷ் சௌத்ரீ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.