
ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேசம் – ஆந்திரா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிக்கி புயி 149, கரண் ஷிண்டே 110 ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்தின் தொடக்க நாளில் ஹனுமா விஹாரி பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. இதனால் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆந்திரா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஹனுமா விகாரி மீண்டும் பேட் செய்ய வந்தார். வலது கை பேட்ஸ்மேனான ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடது கை பேட்ஸ்மேனாக மாறினார். கிட்டத்தட்ட ஒரு கையால் மட்டையை பிடித்தபடி விளையாடி இரு பவுண்டரிகளை அடித்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ஹனுமா விஹாரி இறுதியாக சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு அவர், 26 ரன்கள் சேர்த்தார்.