
இந்தியாவில் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே கோப்பை நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் நாகாலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய நாகாலாந்து அணி ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் ஜோஷுவா 13, ஷாம்வாங் வாங்னாவ் 1, ஓரேன் நகுல்லி 1, சுமித் குமார் 20, கேப்டன் ஜோனதன் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 19.4 ஓவர்களில் வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்து நாகாலாந்து அணி ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் நாகாலாந்து அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களைக் கூட கடக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.