
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் விராட் கோலி மேலும் ஒரு பவுண்டரியை அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். தற்போது வரையிலும் இந்த சாதனை முன்னாள் வீரர் ஷிகர் தவான் பெயரில் உள்ளது.