
ஆசிய கோப்பைத் தொடர் வரும் 30 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. தொடர் நெருங்க நெருங்க தொடர் குறித்தான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. காரணம் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட இருப்பதே. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு எந்த அளவு எதிர்பார்ப்புகள் இருக்கிறதோ, அதே அளவு எதிர்பார்ப்பு முன்னாள் வீரர்களிடமும் இருக்கிறது.
அதே சமயத்தில் இரு நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, இருநாட்டு விளையாடும் வீரர்களுக்கும் அழுத்தமாக எப்பொழுதும் மாறிவிடும் என்பது அறிந்த விஷயமே. தற்பொழுதும் அப்படியான சூழ்நிலையே நிலவி வருகிறது. தற்பொழுது இந்திய அணி கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரத்திற்கு அருகில் இருக்கும் ஆலூரில், ஆசியக் கோப்பைக்காக ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை அமைத்து பயிற்சி பெற்று வருகிறது.
இந்த பயிற்சி முகாமில் விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களை தாக்கி விளையாடி, பேட்டிங்கில் புதிய அணுகுமுறையைக் காட்டி வருகிறார். அதேசமயத்தில் அவர் ஸ்வீப் ஷாட் விளையாட மாட்டார் என்பதால், கிரீசில் உள்ளே தள்ளி நின்று கட் ஷாட் விளையாடி வருகிறார். தற்பொழுது பயிற்சியில் இருக்கும் விராட் கோலி, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்ற போட்டியில், 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்து, பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்ததை வீழ்த்தி அணியை வெற்றி பெறவைத்தார்.