
உலகக்கோப்பை தொடரில் நேற்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. கடைசி 8 விக்கெட்டுகளை வெறும் 36 ரன்களுக்குள் இழந்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தினர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 8வது முறையாக தோல்வியடைந்தது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வென்றதால் நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் அவர் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக பெற்றுக் கொண்டார். அஹ்மதாபாத் மைதானத்திலேயே விராட் கோலியின் 2 ஜெர்சிக்களில் பாபர் அசாம் கையெழுத்து பெற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.