
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதை தொடர்ந்து இந்த இரு அணிகளும் மோதும் 3ஆஅவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராடுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.
முன்னதாக இந்த டி20 தொடரில் இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். குறிப்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் 42 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் நடந்த 2வது போட்டியிலும் 10 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இத்தனைக்கும் சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் சாதனை படைத்தார். அவரின் இந்த மோசமான பார்ம் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை செலவு செய்து வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தினரை கவலையடைய வைத்துள்ளது.