
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றி ஜஹென்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 120 ரன்களையும், சஞ்சு சாம்சன் 109 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அந்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டபஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். பின் மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கோ ஜான்சன் 29 ரன்களைச் சேர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது. மேலும் சதமடித்து அசத்திய திலக் வர்மா, தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதை வென்றார்.