
பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், தீப்தி சர்மா ஆகியோர் அதுபோல ரன் அவுட் செய்து பலத்த சர்ச்சைகளுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பிபிஎல் தொடரிலும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸின் கடைசி ஓவரைப் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா வீசினார்.
அப்போது 5ஆவது பந்தை வீச வந்தபோது மறுமுனையில் இருந்த பேட்டர் ரோஜர்ஸ், பந்தை வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறியதைக் கண்டு உடனே ரன் அவுட் செய்தார் ஸாம்பா. ஆனால் அவர் செய்த தவறு, பந்து வீசும் முறையை முழுதாக முடித்துவிட்ட பிறகே ரன் அவுட் செய்தார். ஆனால் விதிமுறைகளின்படி பந்துவீசும் முறையை முடிக்கும் முன்பே ரன் அவுட் செய்து விட வேண்டும்.