
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. அதன்பின்னர் நடந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை வென்றிருந்தது.
இந்நிலையில், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் வில் யங் ஒருபக்கம் ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் டிம் ராபின்சன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து வில் யங்குடன் ஜோடி சேர்ந்த ஹென்ரி நிக்கோலஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.