
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 19.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் பெடிங்ஹாம் 45 ரன்களையும், ஆண்டிலே சிமெலேன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். எம்ஐ கேப்டன் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வென்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிக்கெல்டன் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களையும், ரஸ்ஸி வென்டர் டுசென் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 11 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் முறையாக முன்னேறி அசத்தியுள்ளது.