
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்ததுடன் 56 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் மீண்டும் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடிய 29 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.