
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் ரன்கள் ஏதுமின்றி தனது விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்நிலையில் இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை அக்ஸர் படேல் வீசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே தன்ஸித் ஹசன் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அக்ஸர் படேல் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட்டிற்காக காத்திருந்தார்.