
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அதேசமயம் நேற்றைய தினம் ராவல்பிண்டியில் பெய்த கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமாகியது.
மேலும் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக இப்போட்டியின் முதல் செஷனானது முற்றிலுமாக கைவிடப்பட்டதுடன், உணவு இடைவேளைக்கு பிறகு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 2 ரன்களுக்கும், கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த சைம் அயூப் - சௌத் ஷகீல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 56 ரன்களில் சைம் அயூப் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது.