
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சின் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவிதது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 50 ரன்களையும், சாய் சுதர்ஷன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து மிரட்டிய கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 ரன்களையும், ரியன் பராக் 22 ரன்களையும் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.