
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து முதல் அணியாக வெளியேறியிருக்கிறது. வங்கதேச அணி கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. மேலும் அந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அங்கு கிரிக்கெட் உள்கட்டமைப்புகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
இப்படி எல்லாம் இருந்தும் கூட வங்கதேச அணி அதற்குரிய தரத்தில் போட்டியை வெளிப்படுத்தாமல், ஏழு போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. கிரிக்கெட் உலகில் வங்கதேச அணியை அவர்களது ரசிகர்கள் ஆதரிப்பது போல வேறு எந்த நாட்டிலும் ஆதரிக்க மாட்டார்கள்.
எவ்வளவு தோல்வி வந்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களது அணியை விட்டுக் கொடுக்காமல் மைதானத்திலேயே ஆதரிப்பார்கள். இன்று ஏழாவது போட்டியில் விளையாடிய வங்கதேச அணி கொஞ்சம் கூட போட்டியை வெளிப்படுத்தாமல் பாகிஸ்தான் அணியிடம் சரணடைந்து தோற்றது. மேலும் கேப்டன் ஷாகிப் அல்ல ஹசன் பேட்டிங் மிகவும் மோசமாக இந்த தொடர் முழுக்க அமைந்திருக்கிறது.