
West Indies Cricket: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அலியா அலீன் மற்றும் கியானா ஜோசப் ஆகியோர் ஐசிசி நடத்தை விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தென் அப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அலிய அலீன் மற்றும் கியானா ஜோசப் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டி நடுவர்களின் முடிவை ஏற்க மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இது வீரர்களின் முதல்நிலை குற்றமாக கருதப்படுகிறது.