
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனே நகரில் நடைபெற்ற போட்டியில் வலுவான நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா டீ காக் 114, வேன் டெர் டுஷன் 133 ரன்கள் அடித்த உதவியுடன் 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நியூசிலாந்து ஆரம்பம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33.5 ஓவரில் 167 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முன்னதாக இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடும் தென்னாப்பிரிக்கா இதுவரை 79 சிக்சர்கள் அடித்து ஒரு உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக உலக சாதனை படைத்துள்ளது.
அத்துடன் பெரும்பாலான போட்டிகளில் அசால்டாக 350 – 400 ரன்கள் அடித்துள்ள அந்த அணி நெதர்லாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் தங்களுடைய முதல் உலகக்கோப்பையை வெல்லும் லட்சியப் பயணத்தில் மிரட்டும் தென் ஆப்பிரிக்கா அடுத்ததாக நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியாவை எதிர்கொள்கிறது.