
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த தென்ஆப்பிரிக்க தொடருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பார்த்தபடியே சில முக்கிய மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது.
அதன்படி புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் ரஹானேவின் துணை கேப்டன் பதவியை பறித்து ரோஹித் சர்மாவிடம் வழங்கியுள்ளனர். மேலும் மிடில் ஆர்டரில் சேர்க்கப்படாமல் இருந்த விஹாரியை அணியில் இணைத்துள்ளார்கள். அதேபோன்று ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பந்த், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.