
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024க்கான ஏலம் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி ஒவ்வொரு அணியிலிருந்தும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து மட்டும் 11 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில், ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று உலகக் கோப்பையில் விளையாடிய ஜோஷ் ஹசில்வுட்டும் ஒருவர். இறுதிப் போட்டியில் மட்டுமே ரவீந்திர ஜடேஜா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
இந்த தொடரில் மட்டும் அவர் 16 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஆர்சிபி அணியில் ரூ.7.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அணியில் இடம் பெற்றிருந்த ஹசில்வுட் கடந்த சீசனில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். ஐபிஎல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், ஆர்சிபி அணியிலிருந்து ஏன் ஹசில்வுட் விடுவிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.