
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இதில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மாவும் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்ததாக விராட் கோலியுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சீரான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இந்த ஜோடியில் விராட் கோலி அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது.