
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான தொடக்கத்தையும் கொடுத்தனர். அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 33 ரன்கள் எடுத்த கையோடு லாரா வோல்வார்ட்டும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லாரா குட்ஆல், மியான் ஸ்மித், சினோல ஜஃப்டா, நோண்டுமிசோ ஷாங்கேஸ் உள்ளிட்ட வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த அன்னேரி டெர்க்சன் - சோலே ட்ரையான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் டெர்க்சன் சதமடித்தும், ட்ரையான் அரைசதம் கடந்தும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.