முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆஅப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான தொடக்கத்தையும் கொடுத்தனர். அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 33 ரன்கள் எடுத்த கையோடு லாரா வோல்வார்ட்டும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய லாரா குட்ஆல், மியான் ஸ்மித், சினோல ஜஃப்டா, நோண்டுமிசோ ஷாங்கேஸ் உள்ளிட்ட வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த அன்னேரி டெர்க்சன் - சோலே ட்ரையான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் டெர்க்சன் சதமடித்தும், ட்ரையான் அரைசதம் கடந்தும் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அன்னேரி டெர்க்சன் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 104 ரன்களிலும், சோலே ட்ரையான் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 74 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் நதின் டி கிளார்க் தனது பங்கிற்கு 32 ரன்களைச் சேர்க்க, தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைக் குவித்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தேவாமி விஹங்கா 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஹாசினி பெரேரா மற்றும் விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஹாசினி பெரேரா 30 ரன்களிலும், விஷ்மி குணரத்னே 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா மற்றும் கேப்டன் சமாரி அத்தபத்து இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சமாரி அத்தபத்து தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தும் அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் ஹர்ஷிதா சமரவிக்ரமா 33 ரன்களுக்கும், சமாரி அத்தபத்து 52 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் அனுஷ்கா சஞ்சீவனி 43 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை மகளிர் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் சோலே ட்ரையான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now