முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தஸ்மின் பிரிட்ஸ் 14 ரன்னிலும், கேப்டன் லாரா வோல்வார்ட் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரபோ மெசோவும் 6 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த லாரா குட்ஆல் - சுனே லூஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் பொறுப்புடன் விளையாடியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா குட்ஆல் 46 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 31 ரன்களில் சுனே லூஸும் ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த சோலே ட்ரையான் மற்றும் அன்னேரி டெர்க்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சோலே ட்ரையான் 35 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய நதின் டி கிளார்க், மசபாடா கிளாஸ், நோன்குலுலேகோ மலாபா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த அன்னேரி டெர்க்சன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததுடன், 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. இலங்கை மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மல்கி மதரா 4 விக்கெட்டுகளையும், தேவ்மி விஹங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஹாசினி பெரேரா மற்றும் விஷ்மி குணரத்னே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் விஷ்மி குணரத்னே 29 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாசினி பெரேரா 42 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா - கவிஷா தில்ஹாரி ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். இதில் கவிஷா தில்ஹாரி 61 ரன்னிலும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 77 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இலங்கை மகளிர் அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரமா ஆட்டநாயகி விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now