
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பாப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,துபாயில் நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 43 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய ஸ்மிருதி மந்தனா 50 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஹர்மன்பிரீத் கவுர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்களைக் குவித்தது. இதைத்தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.