
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களும் வலது கையால் பந்துவீசும் வீரர்களாக இருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணியில் போல்ட், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், இங்கிலாந்து அணியில் சாம் கரண், தென் ஆப்பிரிக்கா அணியில் மார்கோ யான்சன், வங்கதேச அணியில் சொரிஃபுல் ஹொசைன் என்று இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சரியான கலவையில் கலந்திருக்கிறார்கள். இந்திய ஆடுகளங்களில் முதல் 15 ஓவர்களில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களால் சிறப்பாக ஸ்விங் செய்ய முடியும்.
அதேபோல் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித் உட்பட ஏராளமான பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். ஆனால் இந்திய அணியில் இடதுகை பந்துவீச்சாளர்களே தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.