
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான யுபி வாரியர்ஸ் அணியில் அறிமுக வீராங்கனை ஜார்ஜியா வோல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் தயாளன் ஹேமலதா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தயாளன் ஹேமலதா 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பெத் மூனி மற்றும் ஹர்லீன் தியோல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோல் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களை எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஆஷ்லே கார்ட்னரும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய டியாண்டிரா டோட்டினும் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்னிலும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார்.