
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வையட்டும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இதனையடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒருபக்கம் அபாரமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ராக்வி பிஸ்ட் ஒரு ரன்னிலும், கனிகா அஹுஜா 3 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் பெர்ரியுடன் இணைந்த ரிச்சா கோஷ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் பொறுப்புடன் விளையாடி வந்த எல்லிஸ் பெர்ரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், ரிச்சா கோஷ் 3 பவுண்டர், ஒரு சிக்ஸர் என 28 ரன்களுக்கும், ஜார்ஜியா வர்ஹாம் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.