
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனை பெத் மூனி செயல்பட்டு வந்தார். இவர் தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகள் என வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.