Advertisement
Advertisement
Advertisement

இரட்டை சதங்களின் நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் #HBDRohitSharma

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Advertisement
Happy Birthday Rohit Sharma
Happy Birthday Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 30, 2021 • 10:59 AM

கிரிக்கெட்டில் அறிமுகமாகும்போது ஒரு வீரர் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நம்பிக்கையளிக்கிறாரோ அதே நம்பிக்கையில் அவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்கும். ஆனால் இந்த வீரருக்கு ரசிகர்களை ஈர்க்கும் முகமோ, அதிரடியான ஆட்டமோ தொடக்கக் காலத்தில் இல்லை. ஆனால் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் இவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. எதிர்காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கப் போகிறார் என்று...

Bharathi Kannan
By Bharathi Kannan
April 30, 2021 • 10:59 AM

கடந்த 2007 டி20 உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய முத்தரப்பு ஒருநாள் தொடர் என சில போட்டிகளில் நன்றாக ஆடியிருந்தாலும் ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தான் சுரேஷ் ரெய்னா தலைமையில் இளம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு பயணம் மேற்கொண்டது. விராட் கோலி இந்திய ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டிருந்த சமயம்.

Trending

ஆனால் ரோஹித் ஷர்மா என்ற இளம் வீரரை ரசிகர்கள் அந்தத் தொடரில் தான் அடையாளம் கண்டுகொண்டார்கள். விளையாடிய 5 போட்டிகளில் மூன்று அரைசதம். அதிலும் மூன்றாவது போட்டியில் ஹர்பஜன் சிங், பிரவீன் குமாருடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று தன் திறமையை அனைவரும் அறிய வைத்தார். இதைப்பற்றி முன்னாள் இந்திய பயிற்சியாளர் டன்கன் ப்ளெட்சர், ''ரோஹித்தின் இந்த இன்னிங்ஸ் அற்புதமானது. 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த பின், ஆட்டமிழக்காமல் டெய்லண்டர்களுடன் ரோஹித் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டராக முதிர்ச்சியை வெளிப்படுத்தியத் தருணம்'' என்றார்.

அந்தத் தொடருக்கு முன்னதாக உலகக்கோப்பை அணியில் இடம்கிடைக்காத விரக்தியில் ரோஹித் ஷர்மா இருந்தார். அவரிடமிருந்தும் சில ட்வீட்கள் வந்தன. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, எல்லாரும் நல்ல அணி என பாராட்டிக்கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன், ''Rohit Sharma Deserves Place in the WorldCup Squad'' என்று சொல்லி முடிக்கும் முன் அனைவருமே சிரித்துக்கொண்டிருந்தோம்.

ஆனால் ரோஹித் ஷர்மாவின் அண்டிகுவா இன்னிங்ஸ் எங்களின் சிரிப்பை மாற்றி அனைவரின் கண்களையும் அவரை நோக்கி கொஞ்சம் கூர்மையாக கவனிக்க வைத்தது. ஆனால் ரோஹித் ஷர்மா அப்போதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். ஆனால் ஒரே ஒரு முடிவு ரோஹித்தின் வாழ்க்கையையும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் மொத்தமாக மாற்றியது.

இந்திய அணிக்குள் சேவாக் நுழைந்திருந்தபோதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். அவர் நல்ல கிரிக்கெட்டர் என்பதால் கங்குலி ஒரு வாய்ப்பு கொடுத்தார். அது, அணியில் அனைத்து இடங்களுக்கும் வீரர்கள் சரியாக இருக்கிறார்கள். உனக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தொடக்க வீரராக களமிறங்கி நன்றாக ஆடுவது மட்டும் தான். சேவாக்கிற்கு வேறு வழியில்லை. தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அன்று சேவாக்கிற்கு பதிலாக கங்குலி எடுத்த முடிவு இந்திய கிரிக்கெட்டை அணியின் முகத்தை மாற்றியது. அன்று தொடக்க வீரராக களமிறங்கிய சேவாக், வாழ்க்கையில் எந்த போட்டியிலும் வேறு இடத்தில் களமிறங்கவே இல்லை. கடைசி வரை தொடக்க வீரர் தான்.

இதேபோல் தான் ரோஹித்திற்காக தோனியும் கங்குலி எடுத்த அதே முடிவை எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர். கம்பீர் - ரஹானே இணை தொடக்கத்தில் சொதப்ப, பெஞ்சில் இருந்த ரோஹித்திற்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கிறது. முதல் போட்டியிலேயே 83 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டம் முடிந்த பின் ரோஹித் பற்றி பேசிய தோனி, ''அவரின் திறமைக்கு ரன்கள் சேர்க்கவில்லை என்றால் அது அவருக்கு அவமானம். பெரிய ரன்களை எளிதாக எடுக்கக் கூடிய வீரர்'' என்று சுருக்கமாகப் பாராட்டினார்.

அங்கிருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர். விஜய், ரஹானே, தினேஷ் கார்த்திக், தவான் ஆகியோரில் யாரைத் தொடக்க வீரராக சேர்க்கப் போகிறார் எனத் தெரியவில்லை. தோனியைத் தவிர்த்து அனைவருமே அனுபவமில்லாத வீரர்கள். பயிற்சி ஆட்டங்களில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டது. தொடரில் தவானுடன் ரோஹித் சர்மா தான் தொடக்கம். அந்தத் தொடரில் தொடக்க வீரராக ஜொலிக்கத் தொடங்கிய ரோஹித், அதன்பின் எங்குமே சறுக்கவில்லை.

தொடக்கக் காலத்திலிருந்து ரோஹித் எப்போதும் சுறுசுறுப்பின்றி இருக்கிறார் என்ற விமர்சனம் ரசிகர்களிடமிருந்து வரும். அவர் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என முகத்தில் விராட் கோலியைப் போல் காட்ட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் அவரோ முகத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டுவதற்கு பதிலாக தனது பேட்டில் ஆக்ரோஷத்தைக் காட்டத் தொடங்கினார்.

சில வீரர்கள் 50 ரன்கள் எடுத்தால் சதம் விளாச வேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் ரோஹித் ஷர்மா 50 ரன்களைக் கடந்துவிட்டாலே, ''இன்னிக்கு ஒரு 200 இருக்கு'' என ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பு அமர்வார்கள். இத்தனை ஆண்டுகளில் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இதுதான்.

ரோஹித்தின் ஆட்டம் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போல் இருக்கும். 30 பந்துகளை எதிர்கொண்டுவிட்டால் அது ஒருநாள் போட்டியைப் போல் மாறும். ஆனால் அதே ரோஹித் 70 பந்துகளை எதிர்கொண்டால், ஒவ்வொரு பந்தும் பவுண்டரி எல்லைகளைக் தொட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் ரோஹித்தின் ஃபார்முலா. முதலில் களத்தையும், சூழலையும் கணிக்க வேண்டும். பின்னர் தனது அதிரடிக்கு மாறவேண்டும் என்பதே ஹிட்மேனின் தாராக மந்திரம்.

ஒவ்வொரு அணியின் கேப்டன், வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் தெரியும் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதைவிட ஒரு பங்கு கூடுதல் முக்கியம் ரோஹித்தின் விக்கெட்டை எடுப்பது. ஏனென்றால் விராட் கோலி எதிரணியினரிடமிருந்து வெற்றியைப் பறிப்பார் என்றால், ரோஹித் அவர்களின் மனஉறுதியை சுக்குநூறாக்கிவிடுவார்.

சில நாள்களுக்கு முன்பாக ஐசிசி, விவியன் ரிச்சர்ட்ஸ், பாண்டிங், கோலி, கிப்ஸ் ஆகியோரில் யார் புல் ஷாட்டில் சிறந்தவர்கள் என ரசிகர்களைத் தேர்வு செய்யக் கூறியது. அதில் ரசிகர்கள் 5ஆவது ஆப்ஷனாக ரோஹித் ஷர்மாவின் பெயரைப் பதிவிட்டனர். பாண்டிங்கின் புல் ஷாட் கவிதை என்றால், ரோஹித்தின் புல் ஷாட் புதுக்கவிதை. எப்படி பந்து வீசினாலும், ரோஹித் புல் ஷாட் அடிப்பார். லாங் ஆன், ஸ்கொயர் லெக், கவர்ஸ் என அனைத்து திசைகளிலும் புல் ஷாட் பறந்துகொண்டே இருக்கும்.

புல் ஷாட் என்றுமே ஒரு அபாயகரமான ஷாட் தான். ஏனென்றால் நேரம் கொஞ்சம் தவறினாலும் விக்கெட் பறிபோகும். ஆனால் ரோஹித் புல் ஷாட் அடித்தால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம், பந்து நிச்சயம் கேலரியில் இருக்கும் என... தற்போதைய புல் ஷாட் புலி யார் என்றால் ரோஹித் ஷர்மா தான்.

ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா சரி. டெஸ்ட் போட்டிகளில் அவர் அந்தளவிற்கு இல்லையே என சிலர் விமர்சனம் வைப்பார்கள். அனைவரும் ஒருமுறை ரோஹித்தின் ரஞ்சி டிராபி சராசரியைப் பார்க்க வேண்டும். ரோஹித்தின் டெஸ்ட் போட்டிக்கான அடித்தளத்தைக் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலேயே போட்டுவிட்டார். அதிலும் மிக விரைவாக தனது பெயரை நிச்சயம் பதிப்பார்.

உலகக்கோப்பைத் தொடரில் ராகுலுக்கு ஏற்றவாறு தனது ஆட்டத்தை மாற்றியது, அணியின் துணை கேப்டனாக விராட் கோலிக்கு ஆலோசனை வழங்குவது, இளம் வீரர்கள் மீதான விமர்சனத்தை எளிதாக எதிர்கொள்வது, விராட் கோலி இல்லாதபோது அணியை வழிநடத்துவது, ப்ரஸ் மீட்டில் செய்யும் சேட்டைகள் என ரோஹித் ஷர்மா இந்திய அணியின் தன்னிகரற்ற வீரராக உருவாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

2013ஆம் ஆண்டிற்கு பிறகு உலகின் தலைசிறந்த வீரராக மாறிய விராட் கோலி என்னும் ரன் மிஷினை தொடர்ந்து துரத்திவரும் மற்றொரு ரன் மிஷின் ரோஹித் ஷர்மா. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இடம்பிடிக்க முடியாத ரோஹித், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால் அரையிறுதிpயில் தோற்றபோது ரோஹித் கண்ணீர்விட்ட புகைப்படங்கள் அனைவரையும் உலுக்கியது.

உலகக்கோப்பைத் தொடர்களில் சச்சினின் சாதனையை முறியடிக்க உங்களுக்கு வாய்ப்புகள் உள்ளது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது, '' I'm here to Play, Score Runs and Lift the Worldcup for my Country'' எனக் கூறினார்.

இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் ஆட முடியாமல் போன ரோஹித்திற்கு, 2015, 2019 என அடுத்தடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் ஆடிவிட்டார். உலகக்கோப்பை ஆடவேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. மீண்டும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கவுள்ளது. அதில் தனது இன்னொரு கனவை ரோஹித் நிறைவேற்றக் காத்திருக்கிறார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement