
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில், மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் கஜகஜஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடி, ஹங்கேரியின் டால்மா கால்பி மற்றும் அமெரிக்காவின் பெர்னடா பெரா ஜோடியை எதிர்கொண்டது.
இதில், ஒரு மணி நேரம் 15 நிமிடம் வரையில் நடந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 2ஆவது சுற்றுப் போட்டியில் சானியா மிர்சா ஜோடி உக்ரைனினி அன்ஹெலினா கலினினா மற்றும் பெல்ஜியத்தின் அலிசன் வான் உட்வானிக் ஜோடியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரையில் நடக்கும் துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் மூலமாக சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து சானியா மிர்சா ஓய்வு பெறுகிறார். தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தான் அவரது கடைசி கிராண்ட்ஸ்லாம் ஆகும்.