Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: கம்பேக் போட்டியில் கோலடித்த நெய்மர்; தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதியில் பிரேசில்!

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 06, 2022 • 10:35 AM
Brazil Cruise Past S.Korea 4-1; Set Up Last 8 Clash With Croatia
Brazil Cruise Past S.Korea 4-1; Set Up Last 8 Clash With Croatia (Image Source: Google)

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிய அணிகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறின. இதில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆஸ்திரேலியா அணி அர்ஜென்டினா அணியிடம் போராடி தோல்வியடைந்தது. அதேபோல் ஜப்பான் அணி குரோஷியா அணியை வீழ்த்த கடைசி நிமிடத்திலும் போராடி பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் மூன்றாவது ஆசிய அணியான தென் கொரியா பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மர் களம் புகுந்தார். கடந்த போட்டியில் பிரேசில் அணி கேமரூனிடம் தோல்வியை சந்தித்திருந்ததால், தென் கொரியா அணிக்கு வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பிரேசில் அணியோ, அந்த காட்சியெல்லாம் இந்த ஆட்டத்தில் இல்லை என்று பதிலளிக்கும் வகையில் ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. இதற்கு தென் கொரியா பதிலடி கொடுக்கும் என்று கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு பிரேசில் அணியின் நெய்மர் 13ஆவது நிமிடத்தில் அடுத்த இடியை இறக்கினார்.

அதன்படி 13ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், நெய்மர் நிதானமாக கோல் அடித்ததோடு, பிரேசிலுக்கு உரித்தான சாம்பா நடனத்தை ஆட தொடங்கினர். அதன்பின் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ரிச்சர்லிசன் 3ஆவது கோலை அடிக்க, அடுத்த 7ஆவது நிமிடத்திலேயேஎ, அதாவது ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் மீண்டும் பிரேசில் அணியின் லூகாஸ் கோலடித்து முதல் பாதியிலேயே அணியின் வெற்றியை உறுதிசெய்தார். 

இதன் பின் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதி முடிவில் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் வேறு எந்த கோலும் அடிக்கவிட கூடாது என்ற நோக்கத்தோடு தென் கொரியா வீரர்கள் களமிறங்கினர். அதற்கேற்ப முதல் 15 நிமிடங்களில் தென் கொரியா வீரர்கள் தடுப்பாட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். 

இதனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 76ஆவது நிமிடத்தில் தென் கொரியா முதல் கோல் அடித்தது. ஃபிரீ கிக் மூலம் உருவான வாய்ப்பில் தென் கொரிய அணியின் பைக் சியூங் ஹோ அசாத்தியமான கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தில் 4-1 என்ற நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பாதி கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், அதில் எந்த கோலும் அடிப்படவில்லை. 

இருப்பினும் இரண்டாம் பாதி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் தென் கொரியா அணி தோல்வியடைந்து உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அனைத்து ஆசிய அணிகளும் வெளியேறியுள்ளன. மேலும் காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement