Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளிக்குமா குரோஷியா?

அர்ஜெண்டினா - குரோஷியா அணிகள் மோதும் உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி இன்று நள்ளிரவு தோஹாவில் நடைபெறுகிறது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 13, 2022 • 09:13 AM
FIFA 2022 World Cup Semifinals Promise Pragmatism Over Brilliance
FIFA 2022 World Cup Semifinals Promise Pragmatism Over Brilliance (Image Source: Google)

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா, குரோஷியா மோதும் அரையிறுதி போட்டி தோஹாவில் உள்ள லூசெயில் ஐகானிக் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவு நிறைவேறுமா? லூகா மோட்ரிக் புதிய வரலாறு படைப்பாரா? என கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடைசியாக 2014ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை அர்ஜென்டினா சென்றிருந்தது. அதில் 1-0 என ஜெர்மனி உடன் தோல்வியை தழுவி கோப்பையை நழுவ விட்டது. அதற்கு முன்பு 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா தனது இரண்டாவது உலகக்கோப்பையை கைப்பற்றியது. அப்போது டியகோ மாரடோனா தனி ஒருவனாய் போராடி இருப்பார். இதேபோல் இம்முறை வெற்றிக் கனி பறிக்க மெஸ்ஸி முக்கிய பங்கு வகிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடப்பு தொடரில் மெஸ்ஸி கோல் அடிப்பதை காட்டிலும் மற்றவர்கள் கோல் அடிக்க பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இதனால் ஒன்றுபட்ட அணியாக கைகோர்த்து தங்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகின்றனர். 2022 உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதுக்கான ரேஸில் எம்பாப்பேவிற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் மெஸ்ஸி.

முன்னதாக 2018 உலகக்கோப்பை தொடரில் குரோஷியா முதல்முறை இறுதிப் போட்டி வரை சென்றிருந்தனர். ஆனால் பிரான்ஸ் அணியிடம் 4-2 என தோல்வியை தழுவி இரண்டாம் இடம் பிடித்தனர். அதேபோன்று நடப்பு தொடரிலும் செம ஃபார்மில் இருக்கின்றனர். முன்னாள் சாம்பியன் பிரேசிலை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து நெய்மரின் கனவை தகர்த்தனர். அந்த வரிசையில் மெஸ்ஸியின் கனவை அடிச்சு நொறுக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த அளவிற்கு டிஃபன்ஸில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. கடைசி வரை கோல் அடிக்க விடாமல் தடுத்து கூடுதல் நேரத்திற்கு அழைத்து சென்று விடுகின்றனர். அதன்பின்னர் பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்று அசத்துகின்றனர். இதில் கோல் கீப்பர் லிவாகோவிச்சின் பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டு நாக்-அவுட் சுற்றிலும் இதே ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் குரோஷிய அணியின் டிஃபன்ஸை உடைக்க அர்ஜென்டினா போராட வேண்டியிருக்கும்.இதனால் இன்றைய அரையிறுதி போட்டி அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement