Advertisement

இந்த தோல்வி என்னை பெரிதும் காயப்படுத்தி விட்டது -நெய்மர் ஜூனியர்!

இந்த தோல்வி என்னை பெரிதும் காயப்படுத்தி விட்டது. போட்டி முடிந்து சுமார் 10 நிமிடங்கள் என்னை நிலைகுலைய செய்தது என பிரேசில்  அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்விட்டுள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 12, 2022 • 11:57 AM
Fifa World Cup 2022: Neymar Posts Lengthy Instagram Post After Brazils’ World Cup Exit!
Fifa World Cup 2022: Neymar Posts Lengthy Instagram Post After Brazils’ World Cup Exit! (Image Source: Google)

கத்தாரில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அழுததை யாராலும் மறக்க முடியாது. தோல்வி எந்த அளவிற்கு அவரை வாட்டி எடுத்தது என்பதை உலக கால்பந்து ரசிகர்கள் கண்கூடாக பார்த்தனர். அவரை தேற்றுவதற்கு சக வீரரான டேனி ஆல்வ்ஸ் அருகிலேயே நீண்ட நேரம் நின்றிருந்தார். ஆனால் விளையாட்டில் வெற்றி, தோல்விகளை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். கூடுதல் நேரம் முடிந்தும் 1-1 என்ற ட்ராவில் இருந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.

அதில் 4-2 என குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பெனால்டி ஷூட்-அவுட்டில் நெய்மர் ஐந்தாவதாக பெனால்டி அடிக்கும் வகையில் பயிற்சியாளர் டைட் வியூகம் வகுத்திருந்தார். ஆனால் அந்த பெனால்டி வருவதற்குள் ஆட்டமே முடிந்து வெற்றி குரோஷிய அணி வீரர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இதனால் டைட்டின் பெனால்டி ஷூட்-அவுட் திட்டம் பெரும் சர்ச்சையானது.

அவரை பலரும் திட்டி தீர்த்தனர். இந்நிலையில் நெய்மரை ஆறுதல்படுத்த வந்த குரோஷிய நட்சத்திர வீரர் லூகா மோட்ரிக் அவருடன் உறையாடிக்கொண்டிருந்தார். அப்போது குரோஷிய அணி வீரர் லியோ பெரிசிக்கின் மகன் மைதானத்திற்குள் ஓடிவந்து நெய்மருக்கு ஆறுதல் சொன்ன காணொளி வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெய்மர் போட்டுள்ள பதிவில், “மன ரீதியாக மிகவும் உடைந்து போய்விட்டேன். இந்த தோல்வி என்னை பெரிதும் காயப்படுத்தி விட்டது. போட்டி முடிந்து சுமார் 10 நிமிடங்கள் என்னை நிலைகுலைய செய்தது. எனது கண்களில் தாரை தாரையாக வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த தோல்வி என்னை நீண்ட காலத்திற்கு பாதிக்கும் என்று நினைக்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பதிவு செய்து வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NJ (@neymarjr)

பிரேசில் அணிக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா? என்று நெய்மரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்னால் உறுதியாக சொல்ல முடியாது” என்று மழுப்பலாக பதிலளித்தார். இந்நிலையில் நெய்மரின் இன்ஸ்ட்ராகிராம் பதிவிற்கு பிரேசிலின் முன்னால் ஜாம்பவான் பீலே பதில் போட்டுள்ளார். அதில், “தொடர்ந்து கால்பந்து உலகில் முன்னுதாரணமான வீரராக தொடருங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடப்பு உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரில் காலிறுதியில் குரோஷியா அணிக்கு எதிராக நெய்மர் அடித்த கோல் பீலேவின் சாதனையை சமன் செய்தது. அதாவது பிரேசில் அணிக்காக சர்வதேச போட்டிகளில் 92 போட்டிகளில் விளையாடி பீலே 77 கோல்கள் அடித்திருந்தார். இந்நிலையில் நெய்மர் 124 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்துள்ளார். விரைவில் பீலேவின் சாதனையை முறியடித்து தொட முடியாத உச்சத்தில் போய் அமர்ந்து கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement