Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்த பிரேசில்!

ஃபிஃபா உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய பிரேசில் வீரர்களுக்கு குரோஷியா கேப்டன் மோட்ரிச் கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 10, 2022 • 09:58 AM
FIFA World Cup: Croatia Stun Brazil In Penalty Shootout To Reach Semis
FIFA World Cup: Croatia Stun Brazil In Penalty Shootout To Reach Semis (Image Source: Google)

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடரை வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணியை எதிர்த்து குரோஷியா அணி விளையாடியது. இதில் தொடக்கம் முதலே பிரேசில் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது.

இருப்பினும் 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தின் முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் அசாத்திய கோல் ஒன்றை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர் பிரேசில் வீரர்கள் சிறிது அசால்ட்டாக விளையாட, குரோஷியா அணி 116ஆவது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குரோஷியா அணியின் ப்ரூனோ பெட்கோவிச் கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலை ஏற்படுத்தினார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே குரோஷியா கோல்கீப்பர் பிரேசில் அணியின் 9 கோல் வாய்ப்பை தடுத்து நிறுத்தியதால், ரசிகர்களிடையே அச்சம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1986 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் எந்த உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியிலும் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பிலும் குரோஷியா தோல்வியடைந்ததில்லை என்று வர்ணனையாளர்கள் விவரிக்க, பிரேசில் ரசிகர்களின் இதயம் அங்கேயே நொறுங்கிபோனது.

அதற்கேற்ப முதல் பெனால்டியை குரோஷியா வீரர் நிக்கோலா அடிக்க, மறுபக்கம் பிரேசில் வீரர் ரோட்ரிகோ அடித்த பந்தை கோல்கீப்பர் லிவாகோவிச் தடுத்து நிறுத்தினார். இதன் பின்ன குரோஷியா வீரர்கல் அனைவரும் பெனால்டியை தவறவிடாமல் கோல் அடிக்க, பிரேசில் அணியின் மார்கினோஸ் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார். இதனால் குரோஷியா அணி 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த தோல்வியின் மூலம் பிரேசில் அணி காலிறுதி சுற்றோடு வெளியேறியுள்ளது. இதனால் பிரேசில் அணி வீரர்கள் களத்திலேயே கண்ணீர் சிந்தி சோகத்தை வெளிப்படுத்தினர். இதனிடையே பிரேசில் வீரர் ரோட்ரிகோ பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட போது, அவருக்கு சக பிரேசில் வீரரான நெய்மர் ஆறுதல் கூறினார். அப்போது குரோஷியா அணியின் கேப்டன் மோட்ரிச்-ம் ரோட்ரிகோவுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து கண்ணீர் சிந்திய நெய்மரையும் மோட்ரிச் கட்டியணைத்து ஆறுதல் கூறினார். வெவ்வேறு அணிகளில் விளையாடினாலும் எதிரணியின் அனைத்து வீரர்களுக்கும் குரோஷியா கேப்டன் மோட்ரிச் ஆறுதல் கூறியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement