Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பானை வீழ்த்தியது குரோஷியா! 

ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியை 3-1 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan December 06, 2022 • 10:25 AM
FIFA World Cup: Croatia's Livakovic Stops Japan's March With Superlative Saves In Penalty Shootout
FIFA World Cup: Croatia's Livakovic Stops Japan's March With Superlative Saves In Penalty Shootout (Image Source: Google)

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் அணி முன்னாள் சாம்பியன் அணிகள் அங்கம் வகிக்கும் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் இருக்கும் குரூப்பில் இடம்பெற்றது. இதனால் ஜப்பான் அணி குரூப் சுற்றோடு வெளியேற்றப்படும் என்றே ரசிகர்கள் கருதினர். ஆசிய அணிகளில் ஒன்றான ஜப்பான் 1994ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்று வந்தாலும், அதிகபட்சமாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு மட்டுமே முன்னேறியுள்ளது.

ஆனால் ஜப்பான் அணி முதல் போட்டியில் ஜெர்மனியையும், கடைசி போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தனர். தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் குரோஷியா அணியை எதிர்த்து ஜப்பான் இன்று விளையாடியது. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர்.

இந்த நிலையில் ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டைசென் மெய்டா முதல் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாம் பாதியில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தோடு குரோஷிய வீரர்கள் களமிறங்கினர்.

அதற்கு ஏற்ப குரோஷிய அணியின் கேப்டன் மோட்ரிச் மற்றும் பெரிசிக் இருவரும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்து வந்தனர். இதன் பலனாக 55ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிக் குரோஷிய அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 1-1 என்று சமநிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க செய்ய முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இரண்டாம் பாதியின் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் இருந்ததால், கூடுதலாக 30 நிமிடங்கள் நேரம் வழங்கப்பட்டது. ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் முதல்முறையாக கூடுதல் நேரம் இந்தப் போட்டியில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த 30 நிமிடங்களிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் முறை பின்பற்றப்பட்டது. இதில் அனுபவம் வாய்ந்த குரோஷிய வீரர்கள் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை பெற்றனர். குரோஷிய அணியின் கோல்கீப்பர் டாமினிக் லிவகோவிச் 2 ஷூட்களை அற்புதமாக கணித்து தடுத்து நிறுத்தினார். இந்த வெற்றியின் மூலம் குரோஷியா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த தோல்வியால் மனமுடைந்த ஜப்பான் வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் வடித்தனர். இருந்தும் கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய குரோஷிய அணிக்கு கடைசி நிமிடம் வரை சவால் அளித்த ஜப்பான் வீரர்களுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement