
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி போட்டிகள் முடிவடைந்து அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியின் முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி, 6ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இதனிடையே நடப்பு உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இதுவரை 5 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி, நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்ததே இல்லை என்ற விமர்சனம் இருந்தது. இது மெஸ்ஸியின் கால்பந்து வரலாற்றில் கரும்புள்ளியாகவே இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் மெஸ்ஸி முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாட மாட்டார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது.