Advertisement
Advertisement
Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை 2022: தொடக்க ஆட்டத்தில் கத்தார் - ஈக்வேடார் பலப்பரீட்சை!

பிஃபாவின் 22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இதில் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதுகின்றன.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 20, 2022 • 10:02 AM
Four things to look out for in FIFA World Cup opener
Four things to look out for in FIFA World Cup opener (Image Source: Google)

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 22ஆவது சீசன் கத்தார் நாட்டில் இன்று கோலாகமாக தொடங்குகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெறுகிறது. 

டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ‘ஏ’-ல் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் ‘பி’-ல் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் ஆகிய அணிகளும் குரூப் ‘சி’-ல் அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும் குரூப் டி-ல் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா ஆகிய அணிகளும் குரூப் இ-ல் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

குரூப் எஃப்-ல் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா அணிகளும், குரூப் ஜி-ல் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அணிகளும், குரூப் ஹெச்-ல் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா ஆகிய அணிகளும் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 

நாக் அவுட் சுற்று போட்டிகள் டிசம்பர் 3, 4, 5,6,7ஆம் தேதிகளிலும், கலிறுதிப்போட்டிகல் 9,10,11ஆம் தேதிகளிலும், அரை இறுதி 14 மற்றும் 15ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி டிசம்பர் 18ஆம் தேதி 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய லுசைல் மைதானத்தில் நடைபெறுகிறது.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ள கால்பந்து திருவிழாவில் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், 4 முறை பட்டம் வென்றுள்ள ஜெர்மனி, தலா 2 முறை வாகைசூடி உள்ள அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே மற்றும் தலா ஒரு முறை கோப்பையை கைகளில் ஏந்தியுள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட களத்தில் குதிக்க உள்ளன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, நெய்மர், லெவன்டோவ்ஸ்கி, கரேல் பேல், ரோமலு லுகாகு, மோட்ரிக், கிறிஸ்டியன் எரிக்சன், ஹாரிகேன், கரீன் பென்சிமா, கிளியான் பாப்பே போன்ற நட்சத்திர வீரர்களுடன் ஜெர்மனியின் 17 வயதான யூசுபா மவுகோகோ, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், போர்ச்சுகலின் ஜோவோ பெலிக்ஸ், ஸ்பெயினின் அன்சுஃபாத்தி, ஃபெரான் டோரஸ் உள்ளிட்ட இளம் வீரர்களின் கால்பந்தாட்ட கலையும்ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

போட்டியை காண 12 லட்சம் ரசிகர்கள் கத்தாருக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தங்கும் விடுதிகள், மிதக்கும் ஓட்டல்கள், பாலைவனத்தில் பிரத்யேக கூடாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதம் நடைபெற உள்ள கால்பந்து திருவிழாவுக்காக கத்தார் சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது. இவற்றில் பெரும் தொகை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு முறையே ரூ.219 கோடியும், ரூ.203 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

அதேபோல் கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், இரண்டாவது சுற்று போட்டிகளான நாக்-அவுட் ஆட்டங்களுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்படும். இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 3,586 கோடியாக உள்ளது. இது கடந்த முறையைவிட ரூ.328 கோடி கூடுதல் தொகையாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரூ.3,258 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement