
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா மைதானங்களில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்றுகள் முடிந்து அடுத்ததாக கிராஸ் ஓவர் சுற்றுகள் தற்போது நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறி விட்டன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா குரூப் டி-யில் உள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, அடுத்ததாக இங்கிலாந்துடன் நடந்த போட்டியை 2-2 என டிரா செய்தது. இதையடுத்து குரூப்பில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்காக நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
குரூப் டி பிரிவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என சமமாக இருந்தாலும், கோல் கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதையடுத்து கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியா இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் காலிறுதி வாய்ப்பை இந்தியா இழக்கும் என்பதால், இந்திய அணி வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி விளையாடினர்.